தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி நிரந்தரம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடக்கிறது.
கடந்த 4ம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கிய மாநாட்டு பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.
தவேக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநாட்டுக் குழு, தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தில் பதவி நிரந்தரம் இல்லை. மேலும், எதிர்பார்ப்பின்றி உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும், மற்றவர்கள் தவேகத்தைப் பார்த்துதான் அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.