ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசாஷ்கியானை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். அங்கு கசானில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
அதன்பின், ஈரான் அதிபர் மசூத் பெசாஷ்கியானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்தியா-சீனா எல்லையில் ராணுவ ரோந்து பணியை மேற்கொள்வது குறித்து இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.