கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூன், செப்டம்பர் மாதங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் இது எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த இரண்டு முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி படுதோல்வி அடைந்தது.
சில லிபரல் எம்.பி.க்கள், பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தோல்விக்கு காரணம் என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லிபரல் கட்சி எம்.பி.க்கள் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர். அதிருப்தி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.
4 நாட்களுக்குள் (அக்டோபர் 28) பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ட்ரூடோவிடம் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் கொடுத்துள்ளனர். ட்ரூடோ மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எம்.பி.க்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.