திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு வழியாக கால் நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு, பாதி வழியில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. அதோடு, ஒரு இலவச லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஜெகன் மோஹன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
தற்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியில் வந்ததால், திவ்ய தரிசன டோக்கன்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில், ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோக திட்டம் மறுபடியும் தொடங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 கவுன்டர்கள் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதற்காகவும், மற்ற 4 கவுன்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகத்திற்காகவும் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமலையில் ஜூன் 9 முதல் 11-ம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடக்கவுள்ளது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, முதல் நாளில் வைர கவசம், இரண்டாம் நாளில் முத்து கவசம், மூன்றாம் நாளில் மீண்டும் தங்க கவசம் அணிந்து, சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.