வைகாசி விசாகத் திருவிழா – திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய திரண்டுள்ளனர்.

தமிழ் தேவதையான முருகப்பெருமான் பிறந்தவிழா நாடாகக் கொண்டாடப்படும் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், வைகாசி விசாக பெருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான விழா இன்று (ஜூன் 9) திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் பிற வழிபாடுகள் நடைபெற்றன.

மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்ததுடன், சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வரை எழுச்சியுடன் பவனி வந்தார். அங்கு முனிகுமாரர்கள் மீது இருந்த சாபம் நீங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற்றது.

விழாவைக் காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பலரும் பாத யாத்திரையாக வந்திருந்ததுடன், அலகு குத்துதல், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் போன்ற நேர்த்திக் கடன்களையும் செலுத்தினர்.

பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. விழா சிறப்பாக நடைபெற காவல் கண்காணிப்பை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையிலும், கோயில் தக்கார் இரா. அருள்முருகன், இணை ஆணையர் சு. ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் மேலாண்மை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here