புதுவசூர் தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகன் சிலை – மகா கும்பாபிஷேக விழா

0

வேலூர் மாவட்டம் புதுவசூர் தீர்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகன் சிலை – மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்ட 92 அடி உயர முருகன் சிலையின் மகா கும்பாபிஷேக விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வேலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசித்து ஆனந்தமடைந்தனர்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ரங்காபுரத்தையொட்டிய வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் பகுதியில் 500 அடி உயரத்தில் தீர்த்தகிரி மலை மீது பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முன் பகுதியில் 92 அடி உயரமுடைய மிகப்பெரிய முருகன் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. இது உலகளவில் உயரமான முருகன் சிலைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சிலையை, மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி தான் வடிவமைத்துள்ளார்.

மிக நேர்த்தியாக வடக்கு திசையை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, மலை உச்சியில் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த கோயிலும், சிலையும் ஒன்றாகக் கொண்ட மகா கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாக பூஜைகள் தொடங்கின. இன்று அதிகாலை நான்காம் கால யாகம் நடைபெற்றபின்னர், காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் விமானம், மூலவர் கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, காலை 10.15 மணியளவில் தீர்த்தகிரி வடிவேல் முருகன் மற்றும் 92 அடி உயர சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், ட்ரோன் மூலம் சிலைக்கு மலர்தூவி சிறப்பு ஒளியுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவரும் “அரோகரா” முழக்கத்துடன் உருக்கமாக தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வாண வேடிக்கைகள், மகா அபிஷேகம், அலங்கார தரிசனம், திருக்கல்யாண வைபவம் மற்றும் சுவாமி திருவீதி உலா என பற்பல ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையிலான இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியையும் வழங்கினர். இந்த விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் ஏழுமலை மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here