மதுரை கூடலழகர் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி திருவிழாவின் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தேரின் வடங்களை பிடித்து இழுத்தனர்.
வைகாசி பெருந்திருவிழா, கடந்த ஜூன் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்ரீ வியூக சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவியார் மற்றும் பூதேவியாருடன் பலவகையான வாகனங்களில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (ஜூன் 10) விழாவின் ஒன்பதாவது நாளில், அதிகாலை 5.30 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷங்களுடன் தேரை இழுத்தனர். இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்றனர்.
தேரோட்டம் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக சென்று காலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு வேளையில் தங்கச்சிவிகையில் புறப்பாடு நடைபெற்றது.
நாளை (ஜூன் 11) மாலை பெருமாள் எடுப்புச் சப்பரத்தில் சப்தாவர்ண அலங்காரத்துடன் எழுந்தருளவுள்ளார்.
மறுநாள் (ஜூன் 12) காலை 10.15 மணிக்கு, ராமராயர் மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. பனகல் சாலை வழியாக தெற்காவணி மூல வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி சத்திரத்தில் எழுந்தருளுவார். மாலை 4 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று பின்னர் கோயிலுக்கு புறப்படுவார்.
ஜூன் 14ஆம் தேதி விடையாற்றி உற்சவமும், 15ஆம் தேதி அலங்காரத் திருமஞ்சனத்துடன் திருவிழா சிறப்பாக நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகள் கோயில் தக்கார் ந. யக்ஞ நாராயணன் மற்றும் உதவி ஆணையர் பிரிதிபா தலைமையில் கோயில் பணியாளர்களால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.