ஆர்எஸ்எஸ் மற்றும் பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: மோகன் பாகவத் பங்கேற்பு
ஆர்எஸ்எஸ் அமைப்பும் பேரூர் ஆதீனமும் இணைந்து, தங்களது நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் 23-ம் தேதி பேரூரில் கொண்டாடுகின்றன. இதனை ஒட்டி, பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்வை முன்னிட்டு, கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேரூர் ஆதீனத்தின் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனத்தின் குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:
பேரூர் ஆதீனம் கி.பி. 11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் மூலம் நிறுவப்பட்டது. அவரது வழியில் 24-வது குருமகாசந்நிதியாக இருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சைவத்தையும் தமிழையும் உயர்த்திப் பேணியவராக இருந்தார்.
அவரது வழியில், கல்வி, மருத்துவம், சமுதாயம், பண்பாடு போன்ற பல்வேறு துறைகளில் ஆதீனம் பணி செய்து வருகிறது. உலகம் முழுவதும் பரந்து வளர்ந்த 24-ம் குருமகாசந்நிதானங்கள் தமிழரின் ஆன்மிக பண்பாட்டை வலுப்படுத்தியவர்கள்.
சமுதாய மறுமலர்ச்சிக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் இல்லங்களில் திருவிளக்கு பூஜை நடத்தி, மக்களுக்கு தீட்சை அளித்து, அவர்களை ஆதீன சேவையில் இணைத்துச் செயல்பட்ட ராமசாமி அடிகளார், தனது வாழ்நாளை முழுமையாக சமய பணி மற்றும் சமூக சேவைக்காக அர்ப்பணித்தார்.
இந்த ஆண்டு, அவரும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் 100 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதை நினைவுகூரும் வகையில், ஜூன் 23-ம் தேதி பேரூர் ஆதீன வளாகத்தில் விழா நடைபெற உள்ளது.
அன்று காலை 6 மணி முதல் 7:15 மணி வரை வேள்விகள் நடைபெறும். பின்னர், மோகன் பாகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து 11 மணி வரை நடைபெறும் பொதுநிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். பொதுமக்கள் இதில் கலந்துகொள்ளலாம்.