இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாட்டில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம் – 5 கட்டங்களாக நடைபெறுகிறது
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும் 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்காக இலவச ஆன்மிகப் பயணங்கள் நடத்தப்படுகின்றன. அறுபடை வீடு முருகன் கோயில்கள், புரட்டாசி மாத வைணவக் கோயில்கள் மற்றும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த ஆண்டு, ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் 5 கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.
பயண கட்டங்கள்:
- 1ம் கட்டம்: ஜூலை 18 – விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 11
- 2ம் கட்டம்: ஜூலை 25 – கடைசி நாள்: ஜூலை 18
- 3ம் கட்டம்: ஆகஸ்ட் 1 – கடைசி நாள்: ஜூலை 25
- 4ம் கட்டம்: ஆகஸ்ட் 8 – கடைசி நாள்: ஆகஸ்ட் 1
- 5ம் கட்டம்: ஆகஸ்ட் 15 – கடைசி நாள்: ஆகஸ்ட் 8
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள், 60 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆண்டுவருமானம் ரூ.2 லட்சத்தைத் தாண்டாதவர்களாகவும் இருக்க வேண்டும். வருமான சான்றை வட்டாட்சியர் அலுவலத்தில் பெற வேண்டும்.
பயணங்கள் சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து மட்டுமே தொடங்கப்படும்.
விருப்பமுள்ளோர், இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் துறை அறிவித்துள்ளது.