அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் தனது உரையில், “அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவி இருக்காது. கட்சியின் எதிர்கால நிர்வாக அமைப்பில் ஒருங்கிணைப்பாளர் பதவியே முக்கியமாக இருக்கும். அந்த பதவிக்கு கட்சித் தொண்டர்களில் ஒருவர் முன்னிறுத்தப்படுவார்” என்று தெரிவித்தார்.
அதிமுக உருவாக்கப்பட்ட வரலாற்று பின்னணியை எடுத்துரைத்த அவர், “எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகே, புதிய அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கினார். அவர் உருவாக்கிய அதிமுக, மக்களுக்காக அரசியல் செய்யும் நோக்கில் நிறுவப்பட்டது. அதிமுகவின் கொள்கைகள், சட்ட விதிகள் அனைத்தும் எம்ஜிஆரின் கருத்துகளின் அடிப்படையில் உருவானவை” என்றார்.
அத்துடன், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை நினைவுகூர்ந்த ஓ. பன்னீர்செல்வம், “அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவிற்கு 75 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்க மறுத்து, தன்னுடைய அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதால் கூடுதல் தொகுதிகள் கேட்டார். அமித் ஷாவின் வார்த்திகளை ஏற்க மறுத்ததின் விளைவாக, இன்று நாம் ஆட்சியை இழந்து மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளோம்” என்று கூறினார்.
இவ்வாறு, அதிமுகவின் தற்போதைய உள்கட்டமைப்பில் மாற்றம் வரும் என்பதை அவர் சுட்டிக்காட்டி, கட்சியின் வழிகாட்டுதலாக எம்ஜிஆரின் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.