பாகிஸ்தான், இந்தியாவுடனான அண்மைய மோதலில் தங்களது நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் விளக்குவதற்காக, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இந்த குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை வகிக்கிறார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. சில நாட்கள் சுழன்ற அந்த நிலை பின்னர் அமைதிக்குத் திரும்பியது. இதனையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் செயற்பாடுகளை உலகுக்கு வெளிக்காட்டும் நோக்கில், இந்தியா அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்பியது.
இந்தியாவின் நடவடிக்கையை எதிரொலிக்கும் வகையில், பாகிஸ்தானும் பல்வேறு முக்கிய நாடுகளின் தலைநகரங்களுக்கு தங்களது நாடாளுமன்றக் குழுக்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது. இந்தக் குழுக்கள், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தில் விளக்குவதுடன், இந்தியா இடைநிறுத்திய சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் ஏழு குழுக்களில், 59 பேர் கொண்ட அதிகாரிகள் மற்றும் எம்.பிக்கள் 33 நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான் தற்பொழுது இரண்டு குழுக்களை மட்டுமே ஐந்து தலைநகரங்களுக்கு அனுப்புகிறது. பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு நியூயார்க், வாஷிங்டன் டி.சி., லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்துக்குச் செல்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி தலைமையிலான மற்றொரு குழு மாஸ்கோவுக்குச் சென்றுள்ளது.