இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

0

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் குறித்து ட்ரம்ப் செய்த முயற்சிகள் குறித்து எனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார். அவர் மேலும், “ட்ரம்ப் பாகிஸ்தானுடன் பேசியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். ஆனால், நானோ பாகிஸ்தானியர் இல்லை, அமெரிக்கருமில்லை. எனவே, அவர்கள் பேசியதன் உள்ளடக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது” என்றார்.

பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாட்டை சர்வதேசம் புரிந்துகொள்ளும் வகையில், மத்திய அரசு அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து, உலக நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. அந்த குழுவின் தலைவர் சசி தரூர் ஆவார். இந்தக் குழு கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயணங்களை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவை வந்தடைந்துள்ளது.

இந்த பயணத்தையொட்டி வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூரிடம், டொனால்ட் ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தகத்தின் மூலம் முடித்ததாகக் கூறியுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சசி தரூர், “வெள்ளை மாளிகையுடன் உள்ள எங்கள் நல்ல உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அந்த விவகாரம் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பதவிக்கும், அந்த நிலைக்கு இருக்கும் நபருக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். பாகிஸ்தானிடம் அவர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல் எங்களிடம் இல்லை,” என்றார்.

“முதலிலிருந்தே எங்களது நிலைப்பாடு தெளிவானது. பாகிஸ்தான் தாக்கினால், நாங்கள் மேலும் கடுமையாக தாக்குவோம். அவர்கள் நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். இதைத்தான் தொடக்க நாளிலிருந்து கடைசி நாள் வரை சொன்னோம். எனவே, எங்களை யாரும் நிறுத்தச் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” எனவும் கூறினார்.

அதிகம் விமர்சிக்கப்படும் நிலையில், நாடு திரும்பியபின் என்ன பதிலளிக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நாட்டுக்காக பணியாற்றும் போது, இந்த விவாதங்களை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. தேசிய நலனுக்காக செயல் படுவது கட்சி அரசியலுக்கு எதிரான செயல் என்று யாராவது நினைத்தால், அவர்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்றார்.

தற்போது முக்கிய பணியில் கவனம் செலுத்தி வருவதாகவும், தனிநபர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி நேரம் செலவழிக்க விருப்பம் இல்லையெனவும் சசி தரூர் கூறினார்.

தாங்கள் காங்கிரசிலேயே தொடருவீர்களா அல்லது பாஜகவில் இணைய போகிறீர்களா என்பது தொடர்பான சமூக ஊடக கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. எனது பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளது. இப்போது இந்தக் கேள்வி ஏன் எழுகிறது என்று புரியவில்லை” என்றார்.

அதேபோல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அழைப்புக்கு பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்திருப்பதைப் பற்றி, “ஜனநாயகத்தில் இது சாதாரணம். அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சிப்பது இயல்பு. ஆனால், நாங்கள் இங்கு அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்கள் குழுவில் பல மதங்கள், மாநிலங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here