வாட்ஸ்அப் செயலியை நீக்க உத்தரவு – ஈரானின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கை
அண்மைக்காலமாக ஈரானில் உயர்மட்ட தலைவர்கள் மீது நடந்த குற்றச்செயல்கள் மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள், அந்த நாட்டின் பாதுகாப்பை பெரிதும் அதிர்வித்துள்ளன. இந்த தாக்குதல்கள், முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களையும் குறிவைத்துள்ளன.
இவற்றிற்குப் பின்னணி காரணமாக, சில செயலிகள் மற்றும் மொபைல் சாதனங்களின் மூலம் இடம் சார்ந்த தகவல்கள் கசிய வாய்ப்பு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வாட்ஸ்அப்பை தங்கள் மொபைல்களில் இருந்து அகற்றுமாறு பொதுமக்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிவிப்பில், வாட்ஸ்அப் செயலி மூலம் இஸ்ரேலிய ராணுவத்துக்கு பயனர் தரவுகள் கசியக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால், ஈரானில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மெட்டா நிறுவனம், “வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட உரையாடல்களை நாங்கள் கண்காணிக்கவில்லை. யாருக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள் என்ற தரவுகளும் எங்களிடம் இல்லை. எங்கள் சேவைகள் தவறான தகவல்களின் அடிப்படையில் தடுக்கப்படுவதை எங்களால் ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.