WhatsApp Channel
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் 4 வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் நிலையமும் ரூ.240 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்தி சென்றார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்துக்குச் சென்ற அவர், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தைப் பார்வையிட்டார். புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அயோத்தி விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் விமான நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். அப்போது, அயோத்தி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பிற மாவட்டங்களுக்கு ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
ராமர் கோயிலுக்கு செல்லும் 4 வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. ராமபாதை, பக்தி பாதை, தர்மபாதை, ராமஜென்மபூமி என்ற 4 வழிகளையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post