பெங்களூருவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன ஊழியர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது!
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர் ஒருவரை, பாகிஸ்தானுக்காக உளவுப் பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரின் பேரில் மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன.
இந்த நடவடிக்கை மாநில, மத்திய, மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசாரணையின் தொடர்ச்சியாகும். கைது செய்யப்பட்ட நபர் உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தீப் ராஜ் சந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பிற்காக பெங்களூருவில் குடியேறிய இவர், பாகிஸ்தானிலுள்ள சில சந்தேகமான முகவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், மின்னஞ்சல் மூலம் முக்கியமான ரகசிய தகவல்களை பரிமாறியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
தீப் ராஜ் சந்திராவுடன் தொடர்புடையதாக மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதற்கான பின்னணி மற்றும் தொடர்புகளை கண்டறிவதற்காக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.