WhatsApp Channel
இந்த பாலத்திற்கு பிரதமர் 2016 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார்.
மகாராஷ்டிராவில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் “அடல் பாலம்” நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரா செல்கிறார். மதியம் 12.15 மணிக்கு நாசிக் செல்லும் பிரதமர் அங்கு 27வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி- நவ சேவா அடல் பாலத்தை பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார்.
மாலை 4.15 மணிக்கு நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை பலப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ‘போக்குவரத்தை எளிதாக்குவது’ பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும். அதன்படி, மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலம் (துறைமுக இணைப்புப் பாலம்) தற்போது ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பிரதமர் 2016 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் ரூ.17,840 கோடியில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 21.8 கிமீ நீளம் கொண்ட 6 வழி பாலமாகும், கடலில் சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். இது மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.
Discussion about this post