துருக்கி – பாகிஸ்தான் நெருக்கம் : இந்தியர்கள் புறக்கணிப்பு தீவிரம் அடைகிறது
பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு நேர்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆப்ரேஷன் சிந்து” எனும் பதிலடி நடவடிக்கையை தொடங்கியது. இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு பக்கவாட்டாக துருக்கி செயல்படுவதை இந்தியா கவனித்தது. துருக்கி அதிபர் எர்டோகன், பாகிஸ்தான் மீது நம்பிக்கையுடன் நிற்கிறார் என தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டதுடன், இந்தியாவின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்த்தார்.
இந்தியாவைத் தாக்க துருக்கி தயாரித்த SONGAR ட்ரோன்கள் பாகிஸ்தானின் கையில் சென்றுள்ளன. இந்த ட்ரோன்கள் இந்தியாவை இலக்காகக் கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துருக்கியின் சி-130 விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியது, துருக்கியின் போர்க்கப்பல் கராச்சியில் நிறுத்தப்பட்டது என்பன துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்குச் சார்பு காட்டுவதை உறுதிபடுத்துகின்றன.
இந்தியாவுடனான நட்புறவுகளை மீறி, பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாகிஸ்தானை ஆதரிப்பது துருக்கியின் நியாயம் அல்ல என்பதை இந்தியா உலக நாடுகளுக்கு விளக்கியுள்ளது. கடந்த 2023-ல் நிலநடுக்கம் போது துருக்கிக்கு இந்தியா அனுப்பிய உதவிகளை நினைவில் வைத்துப் பார்த்தாலும், தற்போது துருக்கி எடுத்துள்ள நிலைப்பாடு இந்தியர்களின் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் இந்தியாவில் “BoycottTurkey” என்ற ஹேஷ்டேக் வலுவாக பரவி வருகிறது. துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சலவைக் கற்கள் இந்தியா இறக்குமதி செய்வதில் துருக்கியின் பங்கு 70% ஆக இருந்தது. தற்போது அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டதால் துருக்கிக்கு ரூ.1,500 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், துருக்கி சுற்றுலா முன்பதிவுகள் 250% வரை குறைந்துள்ளன. டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துருக்கி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகள், துருக்கியின் இந்தியா எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு நேரடி பதிலாக பார்க்கப்படுகிறது.
இந்தியர்கள் காட்டும் இந்த எதிர்வினையைப் பற்றி எர்டோகன் கூறும்போது, “நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் பாகிஸ்தானுடனே நாங்கள் இருப்போம்; எங்கள் உறவு சகோதரத்துவத்தைப்போல்” என கூறினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் துருக்கிக்கு நன்றி தெரிவித்து, “துருக்கி – பாகிஸ்தான் உறவு ஒவ்வொரு சவாலிலும் வலுப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு, துருக்கி தனது நிலைப்பாட்டை மாறாமல் பாகிஸ்தான் பக்கம் நிற்க, இந்தியா புறக்கணிப்பை வலுப்படுத்தி வருகிறது. வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் துருக்கிக்கு எதிரான இந்தியாவின் எதிர்வினை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.