அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்குதான், இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக, மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு சோக்சி தப்பிச் சென்றார். சமீபத்தில் ஆன்டிகுவாவில் இருந்து கியூபா தப்பிச்செல்ல முயன்ற சோக்சி, அருகில் உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிக்காவில் கைதானார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, டொமினிக்கா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் சோக்சி, பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், நான் சட்டங்களை மீறவில்லை; சட்டத்தை மதித்து நடப்பவன். இந்தியாவில் இருந்து புறப்படும்போது, எனக்கு எதிராக, சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், கைது வாரன்ட் எதுவும் பிறப்பிக்கவில்லை.அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்குதான், இந்தியாவில் இருந்து புறப்பட்டேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.