வடகிழக்கு மாநிலங்களை தாக்கும் கனமழை: 37 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு இந்தியாவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக அசாமில் கனமழை அலைமோதியுள்ளது. இதனால் மாநிலத்திலுள்ள 19 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதி வெள்ளப்பெருக்குடன் ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் சுமார் 2.64 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சொத்துகளை இழந்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் மழை தொடர்கிறது. இதனால் அசாமில் 10 பேர், அருணாச்சலத்தில் 9 பேர், மேகாலயாவில் 6 பேர், மிசோரத்தில் 5 பேர் என மொத்தமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய இராணுவம், விமானப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் தினமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் 19,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். சுமார் 5,000 வீடுகள் அந்த மாநிலத்தில் இடிந்து விழுந்துள்ளன. திரிபுராவில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் இருக்கின்றனர். மிசோரத்தின் மலை பகுதிகளில் 211 நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக மிசோரம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமன்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை தாக்கம் காணப்படுகிறது.