டெல்லியில் லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி கைது: ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

0

லஞ்சம் கேட்ட இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியை சிபிஐ டெல்லியில் கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புடைய பணம் மற்றும் 3.5 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

வருமான வரி செலுத்துவோர் சேவைத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் அமித் குமார் சிங்கால். இவர் 2007ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறையில் சேர்ந்தவர். அண்மையில், லாபினோ’ஸ் பீட்சா நிறுவனம் நடத்தும் சனம் கபூர் என்ற தொழிலதிபர், அதிகாரி சிங்காலைப் பற்றி சிபிஐயிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள சிங்காலின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில், ரூ.1 கோடி பணம், 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாம். அந்த விஷயத்தைச் சரிசெய்யும் பேரில் அதிகாரி சிங்கால் ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் லஞ்சம் கொடுக்காவிட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

புகாரை தொடந்து தீவிரமாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக், சனம் கபூரிடம் முதல் கட்டமாக ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.

முன்னதாக சிங்கால் மும்பையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக பணியாற்றிய அனுபவமுடையவர். தற்போது அவரது உதவியாளர் ஹர்ஷ் கோடக் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சனம் கபூர் அளித்த அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பிறகு, அதிகாரி சிங்காலும், ஹர்ஷ் கோடக்கும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு, ஜூன் 13-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here