பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக்குப் பின்னர் நடந்த கொண்டாட்ட விழாவில் கூட்ட நெரிசல் – 11 பேர் உயிரிழப்பு – முழு விவரம்

0

பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக்குப் பின்னர் நடந்த கொண்டாட்ட விழாவில் கூட்ட நெரிசல் – 11 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு ஏற்பட்ட வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் நேற்று நடந்தது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை கண்ட ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகள், மேளதாளங்கள், மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. எம்.ஜி. சாலை, சிவாஜிநகர், கம்மனஹள்ளி, கோரமங்களா போன்ற பகுதிகளில் மக்கள் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். பெலகாவியில் நடனமாடிய மஞ்சுநாத் கும்பார் (28) மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அபினந்தன் (21) கீழே விழுந்து உயிரிழந்தார்.

விமான நிலைய வரவேற்பு – விதான சவுதாவில் விழா

வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களை வரவேற்க துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமான நிலையம் சென்றார். பின்னர், வீரர்கள் விதான சவுதா மாளிகைக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு நடந்த விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவைக் காண வந்த ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலால் பெண்கள், குழந்தைகள் பலர் கீழே விழுந்தனர். போலீசார் தடியடி செய்ததால் கூட்டம் பிதுங்கியது. 6 மற்றும் 7-வது கேட்களில் இலவச பாஸ் பெற்றவர்கள் கூட்டமாக நுழைய முயன்றதால் பலர் மயங்கி விழுந்தனர்.

மருத்துவமனையில் பரிதாபம்

பவுரிங் மற்றும் வைதேகி மருத்துவமனைகளுக்கு பலரை கொண்டு செல்லப்பட்டது. சிலர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். மொத்தம் 11 பேர் இறந்தனர். மேலும் 37 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பலர் 30 வயதுக்குட்பட்டவர்கள். உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

சாட்சியாளரின் அனுபவம்

நவீன் என்ற ஆர்சிபி ரசிகர் கூறுகையில், “வீரர்களை நேரில் காண ஆர்வமுடன் வந்த ரசிகர்கள் கூட்டமாக ஓடினர். கீழே விழுந்தவர்களை யாரும் தூக்கவில்லை; கூட்டத்தில் மிதிக்கப்பட்டதால் பலர் காயமடைந்தனர். சிலர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சி இன்னும் குறையவில்லை” என்றார்.

மெட்ரோ நிலையங்களில் குழப்பம்

அம்பேத்கர் மெட்ரோ, கப்பன் பூங்கா, எம்.ஜி. சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நெரிசல் காரணமாக மெட்ரோ சேவை முடங்கியது. டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ரசிகர்கள் தடுப்புகளை மீறி ரயிலில் ஏறினர். இதனால் 8 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

அரசு மற்றும் அரசியல் எதிர்வினைகள்

துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “இந்தத் துயர சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா, “அரசின் சீரற்ற ஏற்பாடுகளால் இந்த விபத்து நேர்ந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நீதிமன்ற விசாரணை வேண்டும்” என்றார்.

ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வரின் அறிவிப்பு

முதல்வர் சித்தராமையா, “மொத்தமாக 35,000 பேர் அனுமதிக்கக்கூடிய மைதானத்தில், 2–3 லட்சம் பேர் கூடியதால் இந்நிகழ்வு துயரமாக மாறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். 15 நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

பிசிசிஐ மன்னிப்பு

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, “நிகழ்வை ஒழுங்காக திட்டமிடாதது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது தவறான முன்னுதாரணம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here