அசாமில் வெள்ள நிலைமை மோசமாக தொடர்கிறது – அதிகாரிகள் தகவல்
அசாம் மாநிலத்தில் நிலவும் வெள்ளம் இன்னும் மோசமானபடி இருந்து வருவதோடு, 21 மாவட்டங்களில் சுமார் 7 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா மற்றும் இதர முக்கிய ஆறுகளில் நீர் நிலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹைலகண்டி, திப்ருகர், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் மேற்கு, திமா ஹசாவ், சிவசாகர், கம்ரூப் மெட்ரோ மற்றும் தேமாஜி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பரவலாகவே உள்ளது.
இந்த மாவட்டங்களில், ஸ்ரீபூமி மாவட்டம் – 2,59,601 மக்களுடன் – மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஹைலகண்டியில் 1,72,439 பேர், நாகோனில் 1,02,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 14,977.99 ஹெக்டேரில் பரந்துள்ள பயிர் நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மேலும், 5,15,737 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 66 வருவாய் வட்டங்களில் உள்ள 1,494 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபூமியில் 339 கிராமங்கள், நாகோனில் 189, கச்சாரில் 166 மற்றும் ஹைலகண்டியில் 156 கிராமங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்க 405 முகாம்கள் செயல்படுத்தப்பட்டு, அவற்றில் 41,317 பேர் தங்கி உள்ளனர். கூடுதலாக, 1,12,324 நிவாரணப் விநியோக மையங்கள் இயங்குகின்றன.
மாநிலத்தின் பல இடங்களில் சாலை, பாலம், பள்ளி, அங்கன்வாடி மையங்கள், மின் அமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா உள்ளிட்ட 9 ஆறுகள் தற்போது மூன்று இடங்களில் அபாயக்கட்டத்தைக் கடந்து ஓடுகின்றன. பராக் நதி மற்றும் அதன் கிளை ஆறுகளும் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால், கச்சார் மாவட்டத்தில் சூழ்நிலை தீவிரமாக உள்ளது.
தெற்காசாமில், ரயில்வே பாதைகளில் வெள்ள நீர் அதிகரிப்பதால், சில குறுகிய தூர பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே பணியாளர்கள் 24 மணி நேரமும் நீர்மட்டம் குறைக்க பணியாற்றுகிறார்கள் என வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவஹாத்தி பகுதியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, “முகாம்களில் தங்கியுள்ள அனைவருக்கும் தேவையான வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தனது எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளார்.