ஆந்திராவில் தொழிலாளர் சட்ட திருத்தம்: எதிர்ப்பு உயர்வதில் தொழிற்சங்கங்கள் குரல்
ஆந்திரப் பிரதேச அரசு, தொழிற்சாலைகளில் தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் முதலீட்டாளர்களை ஈர்த்து, வணிகத்தை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக, மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியதாவது:
- தொழிலாளர் சட்டம் பிரிவு 54 இன் கீழ், ஒரு நாளில் 10 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
- பிரிவு 55-இன் படி, ஓய்வுக்காலம் ஐந்து மணி நேரத்திற்கு பதிலாக ஆறு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
- ஓவர்டைம் நேரம் காலாண்டுக்கு 75 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேர வேலைக்கு பெண்கள் பங்கேற்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்றும், இது பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும் தொழில்துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
இந்த முடிவுகளுக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கூறியதாவது:
“மோடி அரசு கடந்த 11 ஆண்டுகளாக தொழிலாளர்களின் உரிமைகளை மீறிவருகிறது. இந்த புதிய மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு எதிரானவை. இதைக் கண்டித்து ஜூலை 9ஆம் தேதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன.”