இந்தியாவில் வாக்காளர் பட்டியல் உருவாக்கம் என்பது உலகின் மிகக் கடுமையானதும் வெளிப்படையானதும் ஆகிய செயல்முறைகளில் ஒன்றாகும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.
ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற உலக தேர்தல் ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது என்பது உலகளாவிய அளவில் மிகக் கடினமும் தெளிவான நடைமுறைகளில் ஒன்றாகும். இது, தேர்தல் செயல்முறைகளின் துல்லியத்தையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது,” என்றார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் காலத்திலும், தேர்தலுக்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டிலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் பட்டியல் பகிரப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை 1960ஆம் ஆண்டிலிருந்து தொடர்கிறது. பட்டியலின் தொடர்பான கோரிக்கைகள், எதிர்ப்புகள் மற்றும் மேல்முறையீடுகளும் ஏற்கப்பட்டு செயலில் வரும். இத்தகைய வலுவான நடைமுறை, இந்தியாவிலேயே தேர்தலின் நம்பகத்தன்மையை நிலைத்திருக்கச் செய்துள்ளது.
அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், காவல்துறை, செலவுக்கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள், தணிக்கையாளர்களைப் போலவே பல்வேறு கட்டங்களில் பங்கு வகிக்கின்றன.
தேர்தல் நடைபெறும் நேரத்தில், வாக்குச்சாவடி பணியாளர்கள், காவல்துறை, பார்வையாளர்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, 2 கோடிக்கு மேற்பட்டோர் பணியாற்றுவதால், இந்திய தேர்தல் ஆணையம் உலகின் மிகப் பெரிய அமைப்பாக விளங்குகிறது. இது பல உலகளாவிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த திறனையும் மிஞ்சி, இந்தியாவின் சுமார் 100 கோடி வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது” என தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், தேர்தல் ஆணையரின் இவ்வுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.