குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. AI171 என அழைக்கப்படும் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நகரை நோக்கி மதியம் 1.10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையை சேர்ந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானம், விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
AI171 என்ற எண்ணைக் கொண்ட இந்த விமானத்தில், 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். அவர்களது நிலைமை குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் கரும்புகை மூட்டமாகக் கிளம்பியுள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் வந்ததும், விமான நிலையத்தின் பாதுகாப்பு படை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்றுள்ளனர்.
இந்த விமானம், அகமதாபாதிலிருந்து லண்டன் செல்லும் ஒன்பதரை மணி நேரப் பயணமாக இருந்ததால், அதில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.