அகமதாபாத் விமான விபத்துக்காக ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை வழங்கப்படும் என மதிப்பீடு
காப்பீட்டு துறையில் பணியாற்றும் நிபுணர்கள் தெரிவித்ததாவது:
கடந்த வியாழக்கிழமை, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கி உடைந்தது. இந்த பேரவிபத்தில் 241 பேர் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா நிறுவனத்திற்காக, நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஜி ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. விமானத்தின் பழைமையும் தரமும் அடிப்படையாக கொண்டு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்படும். இந்த அடிப்படையில் ஏர் இந்தியாவுக்கு ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை கிடைக்கும் என நிபுணர்கள் கூறினர்.
மாண்ட்ரியால் மாநாட்டின் விதிகளின் படி, விமான விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பொதுவாக விமானத்துக்கான காப்பீடு தொகை விரைவாக வழங்கப்படும். ஆனால் பயணிகளுக்கான காப்பீட்டு தொகை வழங்கப்பட சிலவழிகளில் காலதாமதம் ஏற்படக்கூடும். சில சம்பவங்களில் இது 3 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது.
ஆயினும், அகமதாபாத் விபத்து விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நேரடியாக தலையீடு செய்யும் சூழலில், இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், உயிரிழந்த பயணிகளின் உரிய வாரிசுகள் யார் என்பதைக் கண்டறிந்த பிறகே இழப்பீடு வழங்கப்படும்.
மாண்ட்ரியால் மாநாட்டின் சட்டப்படி, ஒவ்வொரு உயிரிழந்த பயணியின் குடும்பத்துக்கும் குறைந்தபட்சமாக ரூ.1.26 கோடி இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். மேலும், விமான டிக்கெட்டுகளை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலம் வாங்கிய பயணிகள், கூடுதல் காப்பீட்டு பாதுகாப்பை பெற்றிருக்கக்கூடும். இவர்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை கூடுதல் தொகை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு காப்பீட்டு துறையினர் விளக்கமளித்துள்ளனர்.