தேனிலவு பயணம் கொலைக்கு காரணம்: மூன்று தடவைகள் தோல்வியடைந்த பின் நான்காவது முயற்சியில் கணவர் உயிரிழப்பு
மேகாலயாவில் தேனிலவு கொண்டாடச் சென்ற இடத்தில், ஒரு பெண் தனது கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில், காவல்துறையின் விசாரணையில் குறித்த பெண் முன்பாகவே கணவரைக் கொல்ல மூன்று முறை முயற்சி செய்திருந்தது தெரியவந்துள்ளது. நான்காவது முயற்சியில்தான் அவர் தனது காதலனுடன் சேர்ந்து திட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனா ரகுவன்சி தேனிலவு செல்வதற்காக மேகாலயாவுக்கு வந்திருந்தனர். ஆனால், இது ஒரு கொலை திட்டத்தின் பகுதி என்பதே பின்னர் தெரியவந்தது.
சோனா, தனது காதலர் ராஜா குஷ்வாஹாவுடன் சேர்ந்து, மூவர் அடங்கிய கூலிப்படையை அனுப்பி தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்துள்ளார்.
விசாரணையின் போது, சோனா இதற்குமுன் மூன்று முறை தனது கணவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளதும் தெரியவந்தது. முதலில், குவஹாத்தியில் கூலிப்படையை வைத்து அவரைக் கொல்ல திட்டமிட்டாலும் அது தோல்வியடைந்தது.
அதன் பின் மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் இரண்டு முறை மேலும் முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. இறுதியில், நான்காவது முறையாக வெய்சாடோங் அருவியில் அவர் கணவரைக் கொல்லும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.
சோனா, தனது கணவரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதும், கொலையை எங்கே செய்யலாம் என்பதற்காக இடத்தைத் தேர்வு செய்வதுமாக திட்டமிட்டிருந்தார். முன்னைய முயற்சிகளில் சரியான இடம் கிடைக்காததால், இறுதியில் சூழ்நிலை சாதகமாக இருந்த வெய்சாடோங் பகுதியில் கொலை நடைபெற்றது.
இந்தக் கொலைத்திட்டத்தில், முக்கிய தூண்டுதலாக இருந்தவர் ராஜா குஷ்வாஹாவே எனவும், மேலும் ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த உடலை சோனா எனக் காட்டி எரிக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், சோனாவை தலைமறைவாக்கி, விசாரணையிலிருந்து தப்பச் செய்வதுதான் அவர்களின் நோக்கம்.