போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைவுகள் உள்ளதாக முன்பே எச்சரித்திருந்த ஜான் பார்னெட்டின் பழைய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. 1962ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் கலிபோர்னியாவில் பிறந்த அவரால், பெற்றோர் பிரிவுக்குப் பிறகு தாயாருடன் மற்றும் மூன்று சகோதரர்களுடன் லூசியானாவுக்கு இடம் பெயர்ந்தார். நாசாவின் விண்வெளித் திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
2010 முதல் 2017 வரை வடக்கு சார்லஸ்டனில் உள்ள போயிங் ஆலையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக இருந்த ஜான், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். குறைகளை மறைத்து, உற்பத்தி இலக்கை அடையவே ஊழியர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அவசர சூழ்நிலையில் ஒவ்வொரு நான்காவது ஆக்சிஜன் மாஸ்க் செயலிழக்க வாய்ப்பு உள்ளது என்றும், சில விமானப்பாகங்கள் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். இது விமான பாதுகாப்பு சோதனைகளின் தரத்தை மோசமாக பாதிக்கக்கூடும் என்றார்.
2017-ல் அவர் பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துக்கும் தொழில் பாதுகாப்பு அமைப்பிற்கும் புகார் அளித்ததையடுத்து, போயிங் நிறுவனத்துக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2024 மார்ச் 9-ஆம் தேதி தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டனில் உள்ள ஓட்டலுக்கு வெளியே தனது பிக்கப் வாகனத்தில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். போயிங் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருந்த நிலையில் அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்தது. இதனையடுத்து, ட்ரீம்லைனர் விமான விபத்து சம்பவம் நிகழ்ந்தபின், அவரது பழைய கருத்துகள் மீண்டும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது.