அகமதாபாத் விமான விபத்து: உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது – அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

0

அகமதாபாத் விமான விபத்து: உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது – அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர் நிலை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைமையிலான குழுவிற்கு, மூன்று மாத காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், “கடந்த இரண்டு நாட்கள் மிகுந்த சவாலான நேரமாக இருந்தது. இது அமைச்சகத்திற்கும், நாடளாவிய மக்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அகமதாபாத்தில் நிகழ்ந்த இந்த விபத்து நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். நானும் எனது தந்தையை ஒரு சாலை விபத்தில் இழந்த அனுபவம் உண்டு. எனவே அவர்களின் வேதனையை உணர முடிகிறது.

சம்பவம் ஏற்பட்டதும், என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை நேரில் அறிய நான் உடனே சம்பவ இடத்திற்கு சென்றேன். குஜராத் அரசு அப்போதற்கே மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

நம்மிடம் உறுதியான பாதுகாப்பு முறைகள் உள்ளன. அவற்றை மேலும் பலப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை டிகோட் செய்வதன் மூலம் விபத்துக்கு முன் நிகழ்ந்த தருணங்களை விரிவாக புரிந்துகொள்ள முடியும்.

இந்த விமான விபத்து விசாரணைக்காக உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளதால், அதில் உள்துறைச் செயலாளர் தலைமையேற்கின்றார். குழுவிற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விமான விபத்து புலனாய்வு இயக்குநர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றார். புலனாய்வுப் பிரிவும் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனடியாக திரட்டி வந்தது,” என்றார் அமைச்சர்.

விபத்தில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு

பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல், அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் நடந்தது. இதில் 242 பேர் பயணிகளாகவும், பணியாளர்களாகவும் இருந்தனர். வியாழன் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 வகை விமானம், பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி அருகே விழுந்ததால், அந்த இடத்திலும் பலர் உயிரிழந்தனர்.

விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர். இப்போது வரை, மொத்தமாக 270 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here