2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேதிகளும் இன்று (2025 ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 2027-ல் 16-வது முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும், அதனுடன் சாதிவாரியாகவும் கணக்கெடுப்பு செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களில், பனிப்பொழிவு அதிகம் காணப்படும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் 2026 அக்டோபர் 1 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். மற்ற பகுதிகளில் 2027 மார்ச் 1 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு காணப்படும் இடங்களில் அக்டோபர் 1, 2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும். அதே நேரத்தில், பனிப்பொழிவு இல்லாத பகுதிகள் மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளில் மார்ச் 1, 2027 தேதியே கணக்கெடுப்புக்கான அடிப்படை நாளாக அமையும்.
இந்த பெரியளவிலான பணியில் சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், மேலும் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் டிஜிட்டல் உபகரணங்களைப் பயன்படுத்தி பங்கேற்கவுள்ளனர். இதனடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளில் (ஞாயிற்றுக்கிழமை), மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய உள்துறை செயலாளர், பதிவாளர் ஜெனரல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு முக்கிய கட்டங்களாக நடைபெறும்:
- வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (House Listing Operation – HLO):
ஒவ்வொரு வீடின் நிலை, சொத்துகள் மற்றும் வசதிகளைப் பதிவு செய்வது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு (Population Enumeration – PE):
வீடுகளில் உள்ள நபர்கள், அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்களை சேகரிப்பது.
2011-ல் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் 2027-ல் 16வது முறையாக கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இது 8வது முறையாக நடைபெறும் கணக்கெடுப்பு ஆகும்.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.