பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது

0

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் உயரிய விருது வழங்கப்பட்டது

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய கவுரவ விருதாகக் கருதப்படும் ‘மாகாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருது, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார்.

இந்த விருதை பெற்றதனை தொடர்ந்து, பிரதமர் மோடி, சைப்ரஸ் மக்களுக்கும் அதிபருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பதிவில், “‘மாகாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ என்ற மிக முக்கியமான விருதை வழங்கியதற்காக சைப்ரஸ் அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கானதல்ல; 140 கோடி இந்தியர்களுக்கான மரியாதையாக இதைப் பார்க்கிறேன். இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையிலான நட்புறவுக்காகவே இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். உலக நலனுக்காக நமது நாடுகள் சேர்ந்து பணியாற்றும்,” என குறிப்பிட்டார்.

இதற்குமுன், இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் கலந்து கொண்ட வட்டமேசை கலந்துரையாடலில் பிரதமர் மோடியும், அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸும் பங்கேற்றனர். இதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, கப்பல் மற்றும் கடல்சார் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுற்றுலா போன்ற பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசுகையில் பிரதமர் மோடி, “கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா வேகமான வளர்ச்சி அடைந்துள்ள பொருளாதாரமாக மாறியுள்ளது. சீர்திருத்தங்கள், புதிய கொள்கைகள், நிலையான ஆட்சி, வர்த்தகத்திற்கு ஏற்ற சூழ்நிலை ஆகியவை வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. புதிய கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் முன்னேற்றம், உள்கட்டமைப்புப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்,” என்றார்.

மேலும், இந்தியாவில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணிதம், செமிகண்டக்டர்கள், தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்துவருவதாகவும், சைப்ரஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார். இந்திய தொழிலாளர்களின் திறமை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை மிக வலுவாக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

சைப்ரஸ், 2026-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்க உள்ள நிலையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இவ்வருட இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். இது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here