அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை

0

அகமதாபாத் விமான விபத்து குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது

அகமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்து சம்பந்தமாக, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் டெல்லியில் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஒரு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் சிவில் விமான போக்குவரத்து செயலாளர், குஜராத் அரசின் பிரதிநிதி, விமான போக்குவரத்து இயக்குநரகமான DGCA அதிகாரிகள், விமான பாதுகாப்புப் பணியகம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த குழு, விபத்துக்கான காரணங்களை ஆராய்வதுடன், தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பீடு செய்து, அவற்றை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் விவாதிக்க உள்ளது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட விமானம் தொடர்பான விசாரணைக்கு, அந்த விமானத்தை உருவாக்கிய போயிங் நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்களும் அகமதாபாத் வந்துள்ளனர். விமானியின் தவறு காரணமா, பராமரிப்பு குறைபாடா, பறவை மோதி விபத்து நேர்ந்ததா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் இந்த குழு ஆராயவுள்ளது. மேலும், விமானத்தின் எஞ்சின், இறக்கைகள், தரையிறங்கும் சாதனங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீதும் சிறப்பான கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தக் கலக்கத்திற்கிடையில், போயிங் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாரிஸ் விமானக் கண்காட்சியில் பங்கேற்பதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், “விபத்து காரணம் கண்டறியப்பட வேண்டும் என்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக இருக்கிறோம். அதற்காக எங்கள் குழுவுடன் நாங்கள் இருக்க விரும்புகிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் விசாரணை பணியில் முழு கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கமாகும். இந்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைக்கும்.” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here