உத்தரப் பிரதேசத்துடன் ஈரான் புரட்சி தலைவர் கோமெய்னியின் வரலாற்று தொடர்பு
ஈரானில் மறைந்த முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா ருஹொல்லா கோமெய்னிக்கு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் வரலாற்று இணைப்பு இருப்பது சமீபத்தில் வெளிச்சம் கண்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டில், உ.பி.-யின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்திலிருந்தே அவரது பூர்வீகத்தவர்கள் ஈரானுக்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
1970-களின் பிற்பகுதியில், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை முன்னெடுத்த முக்கியமான தலைவர் தான் ருஹொல்லா கோமெய்னி. அப்புரட்சியின் வழியே அந்த நாட்டின் அரசியல் ரீதியான பாதையை முற்றிலுமாக மாற்றியவர். தற்போது, ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், கோமெய்னியின் வம்சாவளி தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
பத்திரிகையாளர் பாக்கர் மொய்னி எழுதிய “Khomeini: Life of the Ayatollah” என்ற நூலில் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. பெர்ஷியன் மொழி ஊடகத்துறையில் பிபிசியில் பணியாற்றிய மொய்னி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தியாளராகவும் பணியாற்றியவர். அவரது நூலின் அடிப்படையில், கோமெய்னியின் குடும்பத்தினர் இந்தியாவுடன், குறிப்பாக உ.பியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்துள்ளனர்.
மொய்னியின் குறிப்பு படி, லக்னோ அருகிலுள்ள நிஷாபூரில்தான் கோமெய்னியின் மூதாதையர்கள் வாழ்ந்தனர். அந்நேரத்தில் அவத் பிரதேசம் என்றழைக்கப்பட்ட அந்த பகுதி, ஷியா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகு அவத் மன்னர்களின் ஆட்சி முடிந்தது. இதனால், கோமெய்னியின் மூதாதையர்கள் பெர்ஷியாவுக்கே இடம்பெயர்ந்தனர்.
பாராபங்கியில் உள்ள கின்டூர் கிராமத்தில் தீன் அலி ஷா என்றவர்தான் கோமெய்னியின் முன்னோர்களில் ஒருவர். அவரின் குடும்பம் அங்கிருந்து கோமெய்ன் நகருக்கு இடம்பெயர்ந்தது. இதனால், அவர்கள் பெயரில் “கோமெய்னி” எனும் சிறப்புப்பெயர் சேர்க்கப்பட்டது. ருஹொல்லா கோமெய்னியின் தாத்தா சையத் அகமது முஸாவி, உ.பி.யின் பாராபங்கியில் பிறந்தவர். ‘முஸாவி’ என்பது அந்த குடும்பத்தின் மரபுப்பெயராக இருந்து வருகிறது.
17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே, மதப்பரப்பிற்காக ஈரானிய இஸ்லாமிய அறிஞர்கள் இந்தியா வந்தனர். லக்னோ, பாராபங்கி, ஹைதராபாத் போன்ற பகுதிகள் அவர்கள் சென்ற முக்கிய இடங்களாகும்.
அந்த நேரத்தில், பாராபங்கி ஷியா நவாபுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இம்மாநில ஆட்சியாளர்கள், மத அறிஞர்களுக்கு ஆதரவளித்து பதவிகளும் வழங்கினர். அவர்களின் வழிகாட்டுதலால், பலர் உயர்ந்த இடங்களை அடைந்தனர்.
மேலும், ஈரானில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், நிலைமைக்கான எதிர்மறையான சூழ்நிலைகள் என பல காரணங்களால், அறிஞர்கள் மற்ற நாடுகளுக்குப் புறப்பட்டனர். இது அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தந்ததோடு, மதப்பரப்புப் பணியையும் விரிவுபடுத்தியது.
1800-ஆம் ஆண்டுகளில் சையத் அகமது முஸாவி பாராபங்கியில் பிறந்தவர். பிறகு கின்டூர் கிராமத்தில் வாழ்ந்தார். 1830-இல் புனிதப் பயணமாக ஈராக்கிற்குச் சென்று, அங்கிருந்து ஈரானில் குடியேறினார்.
அகமது முஸாவி பின்னர் மூன்று திருமணங்கள் செய்து ஐந்து குழந்தைகளை பெற்றார். இவர்களுள் முஸ்தஃபா என்ற மகனின் மகனாக 1902-ல் பிறந்தவரே அயத்துல்லா ருஹொல்லா கோமெய்னி.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தாக்கம், ஈரானில் இஸ்லாமிய அடையாளங்களை மங்கச் செய்த நிலையில், கோமெய்னியின் எழுச்சி போராட்டங்கள் 1979-இல் புரட்சியை உருவாக்கின. அதன்பின், அவர் நாட்டின் முதல் உச்சத் தலைவராக பதவியேற்றார்.
ருஹொல்லா கோமெய்னி நாடுகடத்தப்பட்ட காலத்தில், அவரின் குடியுரிமை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு எதிர்வினையாக, இந்திய வேர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் பெரிதும் பரவியன. அதில், அவரது தாத்தா அகமது முஸாவி 1869-இல் கொல்லப்பட்டதாகவும், கர்பாலாவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முக்கியமாக, கோமெய்னியின் தாத்தாவின் வாழ்க்கையும், கொள்கைகளும் அவரை உருவாக்கி வழிநடத்திய பின்புலமாக அமைந்துள்ளன. அவரது அரசியல் எழுச்சி, 1979ல் ஷா முகம்மது ரெசா பஹல்வியின் அரசை கவிழ்த்தது. பின்னர் அவரது சீடரான அயத்துல்லா அலி கோமெய்னி தற்போது ஈரானின் தற்போதைய உச்சத் தலைவராகத் தொடர்கிறார்.