ஆந்திராவில் மாம்பழ விவசாயிகளுக்கு அரசு உறுதி!
கடந்த ஆண்டைப் போலவே இவ்வருடமும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ மாங்காயை குறைந்தபட்சம் ரூ.12க்கு வாங்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதில் ரூ.4 வரை அரசு மானியமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை மாம்பழ விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேபோல், திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் கூறியதாவது:
“இந்த ஆண்டு, திருப்பதி மாவட்டத்தில் மட்டும் 14,582 ஹெக்டேரில் மாம்பழங்கள் பயிரிடப்பட்டு, சுமார் 5.5 லட்சம் மெட்ரிக் டன் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மற்றும் சுற்றுப்புறங்களில் 8 மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ மாங்காயை ரூ.12க்கு வாங்கி, அதில் ரூ.4 அரசு மானியமாக வழங்கப்படுகிறது.”
அந்த நேரத்தில், தமிழக விவசாயிகளின் மாங்காய்கள் ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர் பதிலளிக்கையில்:
“இந்த ஆண்டு சித்தூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் தோத்தாபுரி மாங்காய் உற்பத்தி ஏற்பட்டுள்ளது. அதனால் வெளிமாநிலத்திலிருந்து மாங்காய்களை வாங்கும் அவசியம் இல்லை. மேலும், மானியம் மாநில விவசாயிகளுக்கே வழங்கப்படுவதால், பிற மாநில மாங்காய்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு மாநில அரசுகளும் இதைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்றார்.