அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து இடத்தில் சிக்கிய 100 பவுன் தங்க நகைகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் அருகிலுள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரமான நிகழ்வில் விமானம் வெடித்து சிதறியதால் பயணிகள், விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, அருகிலிருந்த கட்டுமானத் தொழிலதிபர் ராஜு படேல் (வயது 56) தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்தைச் சென்றடைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். அவர் கூறுகையில், “விபத்துக் காலத்தில் தீ மிகுந்து பரவியதால் ஆரம்பத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் அந்த இடத்திற்கு நாங்கள் செல்வதற்கு சிரமமாக இருந்தது. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் வந்ததும், நாங்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஸ்ட்ரெச்சர்கள் இல்லாத காரணத்தால், நாங்கள் காயமடைந்தவர்களை புடவைகள் மற்றும் படுக்கைத் திரைகளை பயன்படுத்தி மீட்டோம்” என்றார்.
அந்த மாலை 9 மணி வரை படேல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்தனர். பிறகு அவசர சேவைகள் பிரிவு நடவடிக்கைகளை கைப்பற்றி, அவர்கள் பணிகளைத் தொடங்கியது. அதன்பின் ராஜு படேல் குழு அப்பகுதியிலிருந்து விலகி, மீதமுள்ள பொருட்களை தேடும் பணியில் ஈடுபட்டது.
விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் சொத்துகள் சிதறிக் கிடந்த இடத்தில், படேல் குழுவினர் தேடலில் ஈடுபட்டு, 800 கிராம் (100 பவுன்) தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம், பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத்கீதையின் பிரதியை மீட்டனர். மீட்கப்பட்ட அனைத்தையும் அவர்கள் நேரில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்துள்ளார்.
இதற்குமுன், 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல பேரழிவுகளில் ராஜு படேல் தலைமையிலான குழு மீட்புப் பணிகளில் துணிவுடன் செயல்பட்ட அனுபவம் கொண்டது.