விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது – ஏர் இந்தியா தலைவர் விளக்கம்
அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நேரங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பயணத்தில் இருந்த 242 பயணிகளிலிருந்து ஒருவரைத் தவிர, 241 பேர் உயிரிழந்தனர். இந்த பெரும் பேரழிவு உலகளவில் பரபரப்பான விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் பயணிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “விபத்துக்குள்ளான விமானம் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 2023-ல் விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த பரிசோதனை டிசம்பர் 2025-இல் நடைபெறவிருந்தது. மார்ச் 2025-இல் வலது இயந்திரம் மாற்றப்பட்டு, ஏப்ரல் 2025-இல் இடது இயந்திரம் சோதிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
DGCA (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) வழங்கிய உத்தரவின் பேரில், போயிங் 787 வகை விமானங்களில் முழுமையான பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 26 விமானங்கள் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 விமானங்கள் தற்போது திட்டமிட்ட பராமரிப்பில் உள்ளன. சேவைக்கு மீண்டும் வருமுன் அவை கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களில் ஏர் இந்தியா 83 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நம்பிக்கையை நிலைநிறுத்தும் முயற்சியாக, தற்போது போயிங் 787 மற்றும் கூடுதலாக போயிங் 777 விமானங்களிலும் மேம்படுத்தப்பட்ட முன்-பயண பாதுகாப்பு சோதனைகள் தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் ஜூன் 20 முதல் ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரை, சர்வதேச சேவைகள் 15% குறைக்கப்படுவதாகவும், இந்த காலகட்டத்தில் பயணிக்க இருந்தவர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் இன்றி மாற்று விமானங்களில் மறுமுன்பதிவு செய்யவோ அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறவோ வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.