ரூ.7.42 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கில் மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரியின் கணவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான் என்பவரை, மும்பை போலீசார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். கடந்த மாதம் அவர் மும்பை, தானே மற்றும் புனே நகரங்களில் அரசின் ஒதுக்கீட்டு வீடுகளை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாக கூறி, பலரை ஏமாற்றி சுமார் ரூ.24.78 கோடியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது புதிய தகவலின்படி, சூரத்தில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் உட்பட சிலரை ரூ.7.42 கோடி வரை ஏமாற்றியதாக புதிதாக வழக்கு பதியப்பட்ட நிலையில், மும்பை பொருளாதார குற்றப் பிரிவினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஒரு உயர் அதிகாரி தெரிவித்ததாவது: “அரசு ஒதுக்கீட்டு வீடுகளை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி சூரத்திலுள்ள தொழிலதிபரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். அதேபோல், மகாராஷ்டிரா போலீஸ் அகாடமிக்கு டி-ஷர்ட்கள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக கூறி மேலும் மோசடி செய்துள்ளார்,” என்றார்.