நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

0

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

ஈரானில் ஏற்பட்ட தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்களை அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா முனைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அந்த இரண்டு நாடுகளின் அரசுகளின் உத்தியோகபூர்வ கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

இந்தச் சூழலில், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வர மத்திய அரசு “ஆபரேஷன் சிந்து” என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், இந்திய மாணவர்கள் மற்றும் யாத்திரிகர்கள் உள்ளிட்ட 290 பேர் ஜூன் 20 அன்று தனியார் விமானம் மூலம் புதுடெல்லிக்கு கொண்டு வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 21 அதிகாலை 3 மணியளவில் துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் இருந்து மேலும் ஒரு சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இதுவரை, ஆபரேஷன் சிந்து மூலம் மொத்தம் 517 பேர் பாதுகாப்பாக இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் உள்ள நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இந்த நடவடிக்கை இருநாடுகளின் அரசாங்கங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் நடைபெறுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானில் உள்ள நேபாள மற்றும் இலங்கை குடிமக்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. தேவையான உதவிக்காக தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here