சிசிடிவி காட்சிகளை அழிக்கும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

0

சிசிடிவி காட்சிகளை அழிக்கும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

வாக்குப்பதிவு மையங்களில் பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் 45 நாட்களுக்கு பிறகு அழிக்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ‘ஜனநாயகத்திற்கு விஷம் போன்றது’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

“தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்கள் கழித்து அழிக்க உத்தரவு பிறப்பித்திருப்பதும் கவலைக்குரிய விடயமாகும். இது ஆதாரங்களை முறையாக அழிக்கும் செயல். இதன்மூலம், தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது நேரடியாக ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல்கள், வாக்கெடுப்பு தரவுகள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, மே 30-ம் தேதி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறும் போது புகைப்படங்கள், வீடியோ பதிவு, சிசிடிவி மற்றும் வெப்காஸ்டிங் போன்ற முறைகளில் அனைத்து முக்கிய கட்டங்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த பதிவுகள் சமீபத்தில் சிலர் மூலம் சமூக ஊடகங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டியிலிராத சில தரப்புகள், தவறான தகவல்களை பரப்புவதற்காக இந்த காட்சிகளை வழுவாக பயன்படுத்தியுள்ளனர். இது சட்டப்படி எந்தவொரு முடிவுக்கும் வழிவகுப்பதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், சிசிடிவி மற்றும் ஒளிபரப்பு பதிவுகளை அழிக்கலாம் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here