உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் மற்றும் குமாயோன் பகுதிகளில் தலா ஒரு ஆன்மிக பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்றும், அவை ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிக சுற்றுலாவின் உலகளாவிய மையங்களாக உருவாக்கப்படும் என்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான பராரிசைனில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பங்கேற்றார். அங்கு மாநிலத்தின் முதலாவது யோகா கொள்கையை அவர் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
விழாவில் அவர் கூறியதாவது:
“யோகா ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய வேண்டும்; ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே சர்வதேச யோகா தினத்தின் நோக்கம். இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் ஒத்துழைப்புடன், கர்வால் மற்றும் குமாயோன் பகுதிகளில் ஆன்மிக பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும். இவை ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிக சுற்றுலாவின் முக்கிய மையங்களாக மாறும்.”
மேலும் அவர் கூறியதாவது:
இந்த மண்டலங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். மக்களின் இடம்பெயர்வை குறைக்கும். இவை உலகளாவிய நலவாழ்வு மற்றும் யோகா துறைகளின் மையமாக மாறும். உலகம் முழுவதிலும் இருந்து யோகா பயிற்றுனர்கள், ஆயுர்வேத நிறுவனங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் இந்த மண்டலங்களுக்கு வருவார்கள்.
புதிய யோகா கொள்கையின் கீழ்:
- யோகா மற்றும் தியான மையங்களை நிறுவ ரூ.20 லட்சம் வரை மானியங்கள் வழங்கப்படும்.
- யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்கு ரூ.10 லட்சம் வரை உதவி அளிக்கப்படும்.
- மார்ச் 2026-க்குள், அனைத்து ஆயுஷ் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் யோகா சேவைகள் உறுதி செய்யப்படும்.
- 2030-க்குள் மாநிலம் முழுவதும் ஐந்து புதிய யோகா மண்டலங்கள் உருவாக்கப்படும்” என்றார்.