ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ஜூலை 1-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
இந்தக் கப்பல் தொடர்பாக இந்தியக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது:
ரஷ்யாவின் கடலோர நகரம் கலினின்கிராட்டில் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் தமால்’ போர்க்கப்பல், ஜூலை 1-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும்.
இந்த கப்பலில் நீண்ட தூரத்திலுள்ள கடலும் நிலமும் குறிவைக்கும் சக்தி வாய்ந்த ‘பிரம்மோஸ்’ ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 26 சதவீத உள்நாட்டு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையுமுள்ள இந்த போர்க்கப்பல், இந்திய மற்றும் ரஷ்யாவின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இது மேற்கு கடற்படைப் பிரிவில் சேவையாற்றும்.
‘ஐஎன்எஸ் தமால்’, இந்தியக் கடற்படையின் வளர்ச்சியையும் திறனையும் பிரதிபலிக்கின்றதோடு, இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான வலுவான கூட்டாண்மையையும் வெளிப்படுத்துகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் எட்டாவது போர்க்கப்பல் இதுவாகும் என மத்வால் தெரிவித்தார்.
இந்த போர்க்கப்பலுக்கு, புராணங்களில் கடவுள்களின் ராஜாவான இந்திரனால் போரில் பயன்படுத்தப்பட்ட ‘தமால்’ எனும் வாளின் பெயர் அடிப்படையாக கொண்டு, ‘தமால்’ என பெயரிடப்பட்டுள்ளது.