குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல், 2027 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டப் போட்டி என கூறும் அரவிந்த் கேஜ்ரிவால்!
ஜூன் 19 அன்று குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 5 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக, காங்கிரஸ் மற்றும் டிஎம்சி தலா ஒரு தொகுதியில் வென்றன.
வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்,
“குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா, 2022-ம் ஆண்டைவிட இரட்டிப்பு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவே மக்களின் ஆதரவை காட்டுகிறது,” என்று கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“குஜராத்தின் விசாவதர் தொகுதியில் எங்கள் முன்னாள் மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா, பாஜகவின் கிரித் படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். இதுவே, பாஜகவின் மீது உள்ள மக்களின் கோபத்தையும், ஆம் ஆத்மியின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது. பஞ்சாப் மற்றும் குஜராத்தில் பாஜகவும், காங்கிரஸும் எங்களை எதிர்த்தும் மக்கள் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இரு மாநிலங்களிலும் இரட்டை வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். 2027 தேர்தலில் குஜராத்தில் பாஜக – ஆம் ஆத்மி இடையேதான் போட்டி இருக்கும்,” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், குஜராத்த ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி கூறியதாவது,
“இந்த வெற்றி விசாவதர் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கானது. பாஜக இங்கே வேரூன்ற முடியாமல் உள்ளது. குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான உண்மையான மாற்றுவேறு சக்தியாக ஆம் ஆத்மியே உள்ளதாக இது நிரூபிக்கிறது. 2027 தேர்தலுக்கு இது ஒரு தொடக்க கட்டமே,” என்றார்.