ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் – “தேர்தல்கள் சட்டப்படி நடத்தப்படுகின்றன”
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஜூன் 12-ஆம் தேதி வெளியான நாளிதழில் எழுதிய கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கெதிராக, இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு பதிலளித்து ஒரு மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில், “நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளுக்கேற்ப அனைத்து தேர்தல்களும் தீவிரமாகவும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் நியமித்த பூத் முகவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்கள், வாக்குப்பதிவின் அனைத்துப் பணிகளிலும் பங்கேற்கின்றனர்.
மகாராஷ்டிராவில், முழுமையான தேர்தல் செயல்முறை, சட்டமன்ற தொகுதி அளவில் விரிவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் கீழ் நடை பெற்றது. இதில் 1,00,186 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO), 288 தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO), 139 பொதுப் பார்வையாளர்கள், 41 காவல் பார்வையாளர்கள், 71 செலவுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 288 தொகுதி தேர்தல் அதிகாரிகள் (RO) ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1,08,026 வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்றினர். இவர்களில் 28,421 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்குகளில், காங்கிரஸ் வேட்பாளர்களால் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இருந்தபோதிலும், உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின், அவற்றை எங்களிடம் எழுதி அனுப்பலாம். அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக பேசுவதற்காக உங்களுடன் நேரில் சந்திக்க, உங்களுக்கு ஏற்ற நாளிலும் நேரத்திலும் ஆணையம் தயாராக உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.