கர்நாடக அரசின் வீட்டு வசதி துறையின் மூலம், வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் வீடு கட்டும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என புகார்கள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்பாக ஆலந்த் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆர். பாட்டீல் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், “ராஜீவ் காந்தி வீட்டு வசதி ஆணையத்தில் ஊழல் பரவலாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் பெரும்பாலும் பணம் பெற்றுத்தான் வேலை செய்கின்றனர். ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்து வீட்டு மனைகளை ஒதுக்குகிறார்கள். என் தொகுதியில் 900 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன,” எனக் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் செய்தியாளர்களிடம் பதிலளிக்கையில், “என் துறையில் ஊழல் நடந்ததாக கூறும் எம்எல்ஏக்கள் உறுதியான ஆதாரங்களை வெளியிட வேண்டும். யார், எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி, துறை அதிகாரிகள் அல்லது நானே லஞ்சம் வாங்கினோமா என்பதை தெளிவாக கூற வேண்டும். எந்தவொரு விசாரணைக்கும் நான் தயார். நான் லஞ்சம் வாங்கியதை யாராவது நிரூபித்தால், உடனே என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்,” என்றார்.