சட்டப்பேரவை கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆகாஷ்வானி எம்எல்ஏ கேன்டீனில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் தனது ஆதரவாளர்களுடன் அங்கு நேரில் சென்றார்.

அங்கு, பிளாஸ்டிக் மூடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை திறந்து முகர்ந்து பார்த்த அவர், கேன்டீன் ஒப்பந்ததாரரை அழைத்து, அவற்றைத் தானும் முகர்ந்து பார்ப்பதற்காக கொண்டு வரச் சொன்னார். அதன் பின்னர், அந்த ஒப்பந்ததாரரைத் திடீரென கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொது மக்கள், எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுபற்றி பின்னர் விளக்கம் அளித்த மகாராஷ்டிரா உள்துறை துணைமந்திரி யோகேஷ் கடம், “சஞ்சய் கெய்க்வாட் மீது இதுவரை யாரும் நேரடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே, சட்டப்படி அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, “எம்எல்ஏ ஒருவர் கேன்டீன் ஊழியரிடம் இப்படியொரு செயலில் ஈடுபடுவது தெளிவான அதிகாரப் பதவியின் தவறான பயன்பாடாகும். அத்துடன், போலீசாரின் நடவடிக்கைக்கு கட்டாயமாக தனிப்பட்ட புகாரே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. போலீசாரே தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடியும்” எனக் கூறினார்.

இதையடுத்து, மும்பை கடற்கரை போலீசார் சஞ்சய் கெய்க்வாட் மீது அதிகாரபூர்வமாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் எழுந்த பரபரப்பைத் தொடர்ந்து, எம்எல்ஏ கேன்டீனில் மாநில உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல விதிமீறல்கள் இருப்பது தெரியவந்ததால், கேன்டீன் ஒப்பந்த உரிமம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

Facebook Comments Box