‘ஒரே பாரதம், உயர்ந்த பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அறிவித்தவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி பாராட்டு
சைவ ஒழுக்கம் மற்றும் சிவபக்தியின் வழியாக, ‘ஒரே பாரதம், உயர்ந்த பாரதம்’ என்ற கோஷத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தவர் ராஜேந்திர சோழன் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சமீபத்தில் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தேன். இக்கோவில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். இது சைவ மரபின் ஒரு முக்கியக் கட்டிடம். அவர் வட இந்தியாவிலிருந்து கங்கை நீரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்; இதன் மூலம், இந்தியாவின் வடக்கையும் தெற்கையும் இணைத்தார்.
சைவப் பண்பாட்டின் வழியாகவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘ஒரே பாரதம், உயர்ந்த பாரதம்’ என ராஜேந்திர சோழர் முன்வைத்தார். இன்று நாம் நடத்தும் காசி – தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள், அந்த நோக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றன.
ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு சென்றது போல், நூற்றாண்டுகளுக்குப் பிறகு நானும் கங்கை நீருடன் அங்கு சென்று, பிரகதீஸ்வரர் சன்னதியில் அந்த நீரால் அர்ச்சனை செய்தேன். அப்போது கங்கையின் அருளுடன், அந்த இடத்தில் புனித உணர்வுடன் வழிபாடு நடத்த முடிந்தது என நான் உணர்ந்தேன். இது எனக்கு பெரும் ஆனந்தத்தை அளித்தது. வாழ்க்கையில் இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகள் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன.
எனக்குரிய பெருமையான தருணம் இது எனக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.