‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – விமானப்படை தளபதி ஏ. பி. சிங் விளக்கம்
‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் இந்திய வான்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, விமானப்படை தளபதி ஏ. பி. சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்தியா–பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் கடுமையான போர் நடந்தது. அப்போது, பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்திய தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மே 10 அன்று போரை நிறுத்த ஒப்புக்கொண்டது.
இதற்கிடையில், நடவடிக்கையைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஏ. பி. சிங், பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல். எம். கத்ரே நினைவு சொற்பொழிவில் பேசியதாவது: “இந்த நடவடிக்கை, அரசியல் தலைமையின் உறுதியான முடிவும், முப்படைகளுக்குத் தரப்பட்ட முழு சுதந்திரமும் காரணமாக வெற்றி பெற்றது. தலைமைத் தளபதி அனில் சவுகான், மூன்று படைகளுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்து முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.
பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், 9 தீவிரவாத முகாம்கள் மட்டுமே துல்லியமாக தாக்கப்பட்டன. அனைத்தும் தரைமட்டமாகின. முரித்கே நகரில் லஷ்கர் இ தொய்பா தலைமையகமும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
பின்னர், பாகிஸ்தான் ராணுவம் போரைத் தொடங்கியபோது, எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்கு வகித்தன. இவை மூலம் 5 போர் விமானங்கள், மேலும் 300 கி.மீ தூரத்தில் பறந்த உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்மூலம், மிக அதிக தொலைவில் பறந்த உளவு விமானத்தை தரையிலிருந்து வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தோம். மொத்தம் 6 பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
சுகோய் விமானங்களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதில், ஜகோபாபாத்திலுள்ள ஷாபாஸ் விமானப்படை தளம் கடுமையாக சேதமடைந்தது. அங்கு இருந்த எஃப்-16 விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, மேலும் ஒரு உளவு விமானம் சேதமடைந்தன. பாகிஸ்தானின் ரேடார், பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
இந்தியா–பாகிஸ்தான் போர் மரபு சார்ந்தது அல்ல; உயர்தொழில்நுட்ப வான்வழி தாக்குதல்கள் 90 மணி நேரம் நீடித்தன. பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் ‘ஆகாஷ்’, எம்ஆர்எஸ்ஏஎம், எல்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணைகளால் நடுவானிலேயே அழிக்கப்பட்டன. இதனால் இந்திய தளங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகித்தன.
2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலகோட்டில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதத்தை அப்போது ஆதாரங்களுடன் காட்ட முடியவில்லை. ஆனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது அழிக்கப்பட்ட முகாம்கள், விமானப்படை தளங்கள் பற்றிய செயற்கைக் கோள் படங்களை வெளியிட்டுள்ளோம். இந்த நடவடிக்கையின் குறிக்கோள் தீவிரவாத முகாம்களை அழிப்பதே, அதில் முழு வெற்றி பெற்றோம். எனவே, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டதாகவும், போர் நிறுத்தத்தில் தவறு இல்லை” என அவர் குறிப்பிட்டார்.