டெல்லி மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு, ஏப்ரல் 1ஆம் தேதி கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க, கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம், மே, 10ல் இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்லவும் உத்தரவிட்டது.இந்நிலையில் உடல் நலக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு உடல் எடை மிகவும் குறைந்துள்ளது.காரணமின்றி ஒரு மாதத்தில் ஒருவர் 7 கிலோ எடை குறைந்தால், அது கடும் பிரச்னை. அதனால், மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியுள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் செய்த பிறகே, உள்ளே ஏதேனும் தீவிர நோய் உள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்.
எனவே நான் மீண்டும் சிறையில் சரணடைய 7 நாட்கள் அவகாசம் கோரினார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அமலாக்கத் துறையின் கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்துள்ளது.
ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அந்த மனு ஏற்கப்படாது என தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவுக்கு அமலாக்க இயக்குனரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவரது தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவால் நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறையில் ஜாமீன் உத்தரவு கிடைத்ததும் கெஜ்ரிவாலின் விடுதலை நடவடிக்கைகள் தொடங்கும்.
Discussion about this post