ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் தான் இந்திய பிரிவினைக்கு காரணம்: NCERT
முகம்மது அலி ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் பிரபு ஆகியோரே இந்திய பிரிவினைக்கு காரணம் என்று NCERT குறிப்பிட்டுள்ளது.
பிரிவினையின் துயரத்தை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வெளியிட்ட சிறப்பு தொகுப்பில், “இந்திய பிரிவினை தவறான கருத்துக்களால் ஏற்பட்டது. 1940-ல் முஸ்லிம் லீக் லாகூரில் மாநாடு நடத்தியது. அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா பேசியபோது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்க வழக்கங்கள், இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.”
இறுதியில், ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டது. தனி நபர் ஒருவனே காரணமில்லை. இந்திய பிரிவினைக்கு மூன்று கூறுகள் காரணமாக இருந்தன:
- கோரிக்கையை முன்வைத்த முகம்மது அலி ஜின்னா
- அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்
- செயல்படுத்திய மவுன்ட்பேட்டன்
மவுன்ட்பேட்டன் ஒரு மிகப் பெரிய தவறு செய்தவர். அதிகார மாற்றம் ஜூன் 1948-க்குப் பதிலாக ஆகஸ்ட் 1947 என முன்கூட்டியே நிர்ணயித்தார். இதனால் எல்லைகள் அவசரமாக நிர்ணயிக்கப்பட்டு, முன்தயாரிப்புகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. எல்லைகளை வரையறுக்க சர் சிரில் ராட்க்ளிப்-க்கு வெறும் 5 வாரங்கள் வழங்கப்பட்டன. ஆகஸ்ட் 15, 1947-க்கு 2 நாட்களுக்குப் பிறகும் பல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா என்பது தெரியாத நிலையில் இருந்தனர்.
ஜின்னா பிரிவினையை வலியுறுத்தினாலும், அது அவரது வாழ்நாளில் நடக்குமென்று அவர் எதிர்பார்த்ததில்லை. உதவியாளரிடம் அவர் கூறியது:
“இது நடக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. என் வாழ்நாளில் பாகிஸ்தானைப் பார்ப்பேன் என எதிர்பார்க்கவில்லை.”
சர்தார் வல்லபாய் படேல் பதிவு செய்தார்:
“பிரிவினை ஏற்படாவிட்டால் உள்நாட்டுப் போர் உருவாகும் நிலைமை மோசமாக இருந்தது. உள்நாட்டுப் போரைவிட நாட்டை பிரிப்பது சிறந்தது.”
மகாத்மா காந்தி பிரிவினையை எதிர்த்தார். பிரிவினையில் ஒரு கட்சியாக இருக்க முடியாது என்றும், வன்முறையால் அதை தடுத்து நிறுத்தவும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.