ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் மேகவெடிப்பு, நிலச்சரிவு – 7 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேகவெடிப்பும், நிலச்சரிவும் காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததோடு, மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஜோத் காட்டியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதன் விளைவாக 5 பேர் காயமடைந்தனர். திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “கதுவா மாவட்டத்தில் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும், ஜோத் காட் மற்றும் ஜூதானா உட்பட பல இடங்களில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார்.

மேகவெடிப்புக்குப் பின் வானிலை அறிவிப்பில், கதுவா மாவட்டம் முழுவதும் “கனமழை முதல் மிக கனமழை” பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆறுகள், ஓடைகள் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகே செல்வதை தவிர்க்கவும். மலைப்பாங்கான பகுதிகள், நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள இடங்களைத் தவிர்க்கவும். கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும். அவசர உதவிக்கு 01922-238796 மற்றும் 9858034100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் 14 அன்று கிஷ்த்வாரில் மேகவெடிப்பு ஏற்பட்டதில் திடீர் வெள்ளத்தால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மச்சைல் மாதா கோவிலுக்கு வருடாந்திர யாத்திரை சென்றிருந்தபோது மக்கள் சிக்கியிருந்தனர். இதில் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அங்கு மீட்புப்பணிகள் தொடரும் நிலையில், கதுவாவிலும் இதேபோன்ற மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Facebook Comments Box